ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறை கடந்த ஜூலை 1ந் தேதி முதல் அமலுக்கு வந்த நிலையில் பழைய பைக் மற்றும் கார்களை விற்பனை செய்யும் தனிநபர்களுக்கு வரி இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஜிஎஸ்டி வரி இல்லை பழைய கார், பைக்களுக்கு
ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அமலுக்கு வந்த பிறகு ஆட்டோமொபைல் துறைக்கு அடிப்படை வரியாக 28 சதவிகித பிரிவு சேர்க்கப்பட்டிருந்தாலும், பழைய கார்கள், பழைய பைக்குகளை வாங்கும் வாடிக்கையாளர்களுக்குமே இதே நிலையா என்ற குழுப்பத்திற்கு தீர்வினை மத்திய வருவாய் துறை செயலாளர் ஹஷ்முக் ஆதியா வழங்கியுள்ளார்.
முந்தைய வரி விதிப்பின் படி பழைய வாகனங்கள் வாங்குபவர்களுக்கு 5 5 சதவீதம் வாட் வரி விதிக்கப்பட்டு வந்தநிலையில், ஜிஎஸ்டி.,யின் அடிப்படையில் 28 சதவீத வரி விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதன் காரணமாக வெகுவாக பாதிக்கப்பட்ட பழைய வாகனங்கள் விற்பனை துறைக்கான வரி தொடர்பான குழப்பத்திற்கு தீர்வினை வழங்கும் வகையில் செய்தியாளர்களிடம் பேசிய ஆதியா கூறுகையில் பழைய கார், இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யும் தனி நபர்கள் ஜிஎஸ்டி வரி செலுத்த தேவையில்லை.
ஜிஎஸ்டி வரி விதிப்பு சட்டம் 9[4] பிரிவின் கீழ் பழைய கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யும் தனிநபர்கள் தொழில்முறை ரீதியான வர்த்தகமாக தங்களது வாகனத்தை விற்கவில்லை. தங்களது, சுய தேவையின் அடிப்படையில் வாகனத்தை விற்பனை செய்வதாக கருத முடியும். அவ்வாறு, தனி நபர் விற்பனை செய்யும் பழைய கார் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படாது.
அதேநேரத்தில், ரிவர்ஸ் சார்ஜ் முறை விதிகளின் அடிப்படையில், பழைய கார்களை, இருசக்கர வாகனங்கள் வாங்கி விற்க்கின்ற முகவர்கள் மற்றும் விற்பனை நிறுவனங்கள் 3 சதவீதம் ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும் என்று ஆதியா கூறி இருக்கிறார். இதனால், பழைய வாகனங்கள் விற்பனை செய்வோர் மத்தியில் இருந்த குழப்பம் சற்றே நீங்கி இருக்கிறது.
இருப்பினும் 3 சதவித வரி மறைமுகமாக வாடிக்கையாளர்கள் மீதே நிறுவனங்கள் சுமத்தும் என்பதனால் பழைய வாகனங்கள் விலையை குறைக்கும் வாய்ப்புகள் உள்ளது.