இந்தியாவில் அதிகம் விற்பனையாகின்ற ஆர்15 பைக்கிற்கு போட்டியான ஹோண்டா சிபிஆர் 150ஆர் பைக்கின் மேம்பட்ட 2020 மாடல் இந்தோனேசியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள நிலையில் நமது நாட்டிலும் விற்பனைக்கு கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.
கடந்த 2016 ஆண்டே முற்றிலும் மேம்பட்ட புதிய சிபிஆர் 150ஆர் பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், இந்திய சந்தைக்கு தொடர்ந்து பழைய மாடலே புதிய நிறங்களை மட்டும் பெற்றதாக விற்பனைக்கு கிடைத்து வந்த நிலையில் போதிய வரவேற்பின்மை மற்றும் யமஹா ஆர்15 பைக்கை விட அதிக விலையில் அமைந்திருந்த காரணத்தால் இந்தியாவிலிருந்து நீக்கப்பட்டது.
2020 சிபிஆர் 150 ஆர் பைக்கில் தொடர்ந்து அதே 150 சிசி ஒற்றை சிலிண்டர், டிஓஎச்சி, லிக்யூடு கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டு 9,000 ஆர்.பி.எம்-மில் 16.9 பிஹெச்பி மற்றும் 7,000 ஆர்.பி.எம்-மில் 14.4 என்எம் டார்க் வழங்குகின்றது. இந்த பைக் 6-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த மாடலில் அனைத்து விளக்குகளும் எல்இடி முறைக்கு மாற்றப்பட்டு, முழு டிஜிட்டல் கிளஸ்ட்டர் கன்சோலுக்கு அதிகப்படியான வசதியையும் வழங்குகின்றது. முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் ஒற்றை மோனோஷாக் ஆகியவற்றைக் கொண்டிருப்பதுடன் ஐந்த ஸ்டெப் அட்ஜெட்மென்ட்டை இருபக்க சஸ்பென்ஷனும் பெறுகின்றது. ஏபிஎஸ் மற்றும் எமர்ஜென்சி ஸ்டாப் சிக்னல் ( Emergency Stop Signal- ESS) அம்சத்துடன் கூடிய இரு முனைகளிலும் டிஸ்க் பிரேக் பெற்றுள்ளது. அவசர பிரேக்கிங் சமயத்தில் அபாய விளக்குகளை தானாகவே ஒளிர தொடங்குகின்றது.
புதிய CBR 150R பைக்கில் டாமினேட்டர் மேட் பிளாக் நிறம், விக்டோரி ரெட் பிளாக் நிறங்களை பெற்றுள்ளது. இந்தோனேசியாவில் ஹோண்டா சிபிஆர் 150ஆர் விலை இந்திய மதிப்பில் ரூ.1.80 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை ஆகும். ஏப்ரல் 1, 2020 முதல் பிஎஸ் 6 நடைமுறைக்கு ஏற்ப அனைத்து வாகனங்களும் மாற்றப்பட உள்ளதால், முற்றிலும் மேம்பட்ட புதிய என்ஜினுடன் நமது நாட்டிலும் விற்பனைக்கு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.